குரூப் 4 பதவிக்கு எழுத்து தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு257702025
குரூப் 4 பதவிக்கு எழுத்து தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7382 பதவிகளுக்கு வரும் 24ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 21.85 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் இன்று காலை வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் விஏஓ 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் என ெமாத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வுகள் நிரப்பப்படும்.
மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அறிவிப்பு வெளியான அன்றே தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க சுமார் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்தனர். இதில் 9,26583 பேர் ஆண்கள், 12,58,616 பேர் பெண்கள், 129 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இவர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 24ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 வரை நடக்கிறது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில்(tnpsc.gov.in, tnpscexams.in) இன்று காலை வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment