சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்! கடைசி நிமிட டிவிஸ்ட்!102993392


சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்! கடைசி நிமிட டிவிஸ்ட்!


தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன். இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார்.

ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் இரண்டு முறை புகாரும் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அப்பெண்ணை விக்னேஷ்வரன் கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த   சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றுள்ளனர். கடத்தல் சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். 

இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாகனத்தை விழுப்புரம் அருகே விக்ரவாண்டி டோல்கேட் அருகே போலீசார் மடக்கி பிடித்து, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். கடைசி நிமிடத்தில் படத்தில் வருவது போல போலீஸ் பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகளான மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சினிமா பாணியில் பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் விக்னேஷ்வரன் மீது காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

 

Comments

Popular posts from this blog